யாழ்ப்பாணத்தில் சுமார் 6 ஆயிரம் போலி குடிநீர் போத்தல்களை யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
யாழ்ப்பாணம் -காங்கேசன்துறை வீதியில் உள்ள விநியோக வர்த்தக நிலையத்தில் நேற்றுக்காலை சுகாதார உத்தியோகத்தர்கள் அதிரடி சோதனை நடத்தினர்.
இதன்போது குடிநீர்ப் போத்தலில் நிறுவன பதிவு இலக்கம் இன்றித் தயார் செய்யப்பட்ட நிலையில் ஓர் இலக்கமும் அதன் மேல் மற்றுமோர் போலி இலக்கமும் ஒட்டப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வாறு விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த சுமார் 6 ஆயிரம் குடிநீர்ப் போத்தல்களை சுகாதார உத்தியோகத்தர்கள் கைப்பற்றி அவற்றினை யாழ். மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.
மேற்படி வழக்கினை ஆராய்ந்த நீதிபதி, குறித்த வழக்கில் மாவட்ட விநியோகஸ்தரோடு பிரதான சந்தேக நபரிற்கு அழைப்பானை அனுப்புமாறும் அதுவரை சான்றுப்பொருட்கனை மன்றில் தடுத்துவைத்ததோடு மாவட்ட விநியோகஸ்தரான 2ம் எதிரியை 40 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதித்து குறித்த வழக்கினை எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.