மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மஞ்சு வாரியர்.
நடிகை மஞ்சுவாரியர் மலையாள சினிமா தயாரிப்பாளரும், இயக்குநருமான ஸ்ரீகுமார் மேனன் மீது திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த அக்டோபர் மாதத்தில் புகாரளித்திருந்தார்.
புகாரில், “இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் சமூகவலைதளங்களில் என் புகழுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருவதுடன், அவரால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீகுமார் மேனன் திரைப்படத்தின் தயாரிப்பு மற்றும் ரிலீஸ் என பல்வேறு கட்டங்களில் என்னை வாய்மொழியாக துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
அவரது நடத்தை எனக்கு தீவிர மன உளைச்சலை ஏற்படுத்தியது. நான் கையெழுத்திட்ட பிளாங்க் செக்குகளை வைத்துக் கொண்டு மோசடி செய்து ஸ்ரீகுமார் என்னை ஏமாற்றினார்.
அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.” எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் இயக்குநர் ஸ்ரீகுமார் மேனனை நேற்று முன் தினம் கைது செய்தனர்.
பிணையில் வெளிவந்த ஸ்ரீகுமார் மேனன், தனது தரப்பு நியாயத்தை காவல்துறையினரிடம் தெரிவித்ததாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன் என்றும் தெரிவித்தார்.