ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறி அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் வடகொரியா சோதித்து வந்தது.
இதன்காரணமாக அந்த நாட்டின் மீது அமெரிக்கா தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்தது. இதன்காரணமாக இரு நாடுகள் இடையே பகைமை நிலவி வந்தது.
கடந்து ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம்ஜாங் அன்னும் சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி பேசினர். இதில், அணு ஆயுதங்களை கைவிடுவது பற்றி தொடர்ந்து பேச இரு தலைவர்களும் முடிவு எடுத்தனர்.
இந்த நிலையில், அமெரிக்காவுடன் அணு ஆயுதங்களை கைவிடுவது பற்றி பேச்சு நடத்துவதற்கு வடகொரியா புதியதொரு நிபந்தனையை விதித்துள்ளது.
இதையொட்டி அசர்பைஜான் நாட்டின் தலைநகரான பாகுவில் நடந்த அணிசேரா இயக்க மாநாட்டில், வடகொரியா நாடாளுமன்ற சபாநாயகர் சோ ரியாங் ஹே பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “ அணு ஆயுதங்களை கைவிடுவது பற்றி அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்த தயார்.
ஆனால் அமெரிக்கா, எங்கள் மீதான விரோத நிலைப்பாட்டை கைவிட வேண்டும்.
எங்கள் மீதான ராணுவ, அரசியல் அச்சுறுத்தல்களை நிறுத்திக்கொள்ள வேண்டும். அதன்பின்னர்தான் பேச முடியும்” என்று குறிப்பிட்டார்.