போரின் இறுதி நாட்களில், இராணுவத் தளபதியாக இருந்த தானோ அல்லது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவோ போருக்கு அஞ்சி ஓடி ஒளியவில்லை என்று அமைச்சரும்,
முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
போரின் இறுதி வாரங்களில் கொழும்பை இலக்கு வைத்து விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதலொன்றை நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும்,
இதனை அறிந்ததாலேயே அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவும் நாட்டைவிட்டு வெளியேறியிருந்ததாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நியூயோர்க் நகரில், இலங்கை பிரஜைகள் மத்தியில் கூறியிருந்தார்.
அவரின் கூற்றுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் களனியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா –
“போரின் இறுதிக் கட்டத்தில் படையினரைப் பலப்படுத்தல் உட்பட மேலும் பல நிர்வாக நடவடிக்கைகள் இடம்பெறும்.
வெறுமனே இருந்து போர் செய்யமுடியாது. போர் முடிவடையும் தறுவாயில் வெளிநாடு சென்றிருந்த அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மே மாதம் 16 ஆம் திகதி நாடு திரும்பினார். எனக்கும் சீனா செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.
இறுதிக்கட்டப் போரின் இரண்டு வாரங்கள் என்பது முக்கிய கட்டம் அல்ல. சாதாரண சிப்பாய்களால்கூட இலகுவாக அதை முடிக்கக் கூடிய களநிலைவரம் இருந்தது.
இரண்டு வாரங்கள் பதில் அதிகாரியாக இருப்பவருக்கு என்ன செய்யமுடியும்? போர் குறித்து முழுமையாக அறியமுடியுமா என்ன?
எம்மிடையே ஓடி ஒளியும் இராணுவம் இருக்கவில்லை. அப்போதைய ஜனாபதி, பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் கூட பின்வாங்கவில்லை.
யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வேளை கவனம் செலுத்த வேண்டிய பல விடயங்கள் உள்ளன. இராணுவ தளபதி வெறுமனே தாக்குதல் குறித்து மாத்திரம் கவனம் செலுத்த முடியாது.
இந்த பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியது சிரேஸ்ட தலைவர்கள் அதிகாரிகளின் கடமை. இதன் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி யுத்தத்தின் இறுதிவாரங்களில் நாட்டை விட்டு வெளியேறினார் நான் சீனாவிற்கு சென்றேன் என்றும் அவர் கூறினார்.